இவர் யாழ் தெல்லிப்பளையை சேர்ந்த திரு திருமதி கந்தப்பிள்ளை தம்பதியினருக்கு இரண்டாவது பிள்ளையாக 22 - 11 - 1931 ஆம் ஆண்டு தோன்றினார். இவருக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர்.
இவர் தனது விடா முயற்சியினாலும் அயராத உழைப்பினாலும், கல்வியின் மேல் உள்ள ஆர்வத்தினாலும் கல்வியை திறம்பட கற்று 1953 ம் ஆண்டு ஆசிரியர் கலாசாலையில் தனது பயிற்சியை திறம்பட முடித்து ஒரு தேர்ச்சி பெற்ற ஆசிரியை ஆக வெளியேறினார்.
இவரது திறமையை அறிந்த வட இந்து மகளிர் கல்லூரி அதிபராக அப்போதிருந்த செல்வி சரவணமுத்து அவர்கள் செல்வி கந்தபிள்ளையை அதே ஆண்டே அக்கல்லூரியில் ஆசிரியையாக நியமித்தார். ஒரு சிறந்த ஆசிரியராகவும் சமயப் பற்றாளராகவும் திகழ்ந்த இவர் கல்வியை மென்மேலும் கற்று லண்டன் கலை பட்டதாரி பட்டமும் பெற்றார்.
வட இந்து மகளிர் கல்லூரியின் திருமன்றம் விடுதியில் இவர் இருந்த போது அங்கு இருந்த வசதியற்ற மாணவிகளுக்கு அப்பியாசப் பத்தகங்களை வாங்கி கொடுத்தும், பாடங்களை சொல்லிக்கொடுத்தும் பல தன்னாலியன்ற உதவிகளை செய்தார். இவரின் உதவி மனப்பான்மையை கண்டு நான் எனக்குள் வியந்த நாட்கள் பல!
இவர் உயர்தர பொதுக்கல்விதராதர வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், இந்து நாகரீகம் ஆகிய பாடங்களை திறம்பட கற்பித்தார். இவரிடம் பல மாணவர்கள் பல்கலைகழகத்துக்கு தெரிவாகி உயர் கல்வி பெற சென்றனர். அங்குள்ள விரிவுரையாளர்கள் மாணவர்களின் அறிவைப்பராட்டி அவர்கள் மூலமாக செல்வி கந்தப்பிள்ளையை அறிந்து அவரின் அறிவுக்கூர்மையையும், கல்வி கல்வி கற்பிக்கும் திறனையும் பாராட்டினர். இவையாவும் அம்மாணவர்கள் மூலம் நாம் அறிந்து கொண்டவை.
செல்வி கந்தப்பிள்ளையின் மூத்த சகோதரியும் ஒரு ஆசிரியராவார். இவர்கள் இருவரின் உதவியினால் இளைய இரு சகோதரிகளும் முறையே விஞ்ஞான பட்டதாரியாகவும், வைத்தியராகவும் தேர்ச்சிபெற்று சேவையாறறுகின்றனர்.
செல்வி கந்தப்பிள்ளை அவர்கள் 1967 ம் ஆண்டு யாழ் மூளாயைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆங்கில ஆசிரியரான திரு செல்வராஜா அவர்களை மணம் புரிந்தார். இவர்களுக்கு நிமலன், றமணி என இரு செல்வங்கள் உள்ளனர். திரு செல்வராஜா அவர்கள் 1983 ம் ஆண்டு சிவபதமடைந்தார்.
திருமதி செல்வராஜா அவர்கள் 1992 ம் ஆண்டு கல்விச் சேவையிலிருந்து இளைப்பாறினார். பின்பு யாழ் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராக பணியாற்றினார். இவர் 15.12.2006 ஆம் ஆண்டு இவுலகை நீத்து விண்ணுலகை அடைந்தார். இவரின் சேவைகள் காலத்தால் என்றும் அழியாது எல்லோர் மனதிலும் நிலைத்து நிற்கும் என்பது திண்ணம்.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்"
திருமதி காம்சனாதேவி மதியாபரணம்
Quelle - http://www.vhgcppa.org/
